பிரித்தானியாவின் லிபரல் டெமக்ராட் (Liberal Democrats) கட்சி, சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டுபவர்களைக் காட்டிக்கொடுப்பவர்களுக்குப் பெரும் தொகையைச் சன்மானமாக வழங்கப்போவதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
பிரித்தானியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டும் (Fly-tipping) குற்றவாளிகளை பிடிக்க உதவும் பொதுமக்களுக்கு 5,000 பவுண்டுகள் பணப்பரிசு வழங்கப்படும் என லிபரல் டெமக்ராட் கட்சி அறிவித்துள்ளது.
நாடெங்கிலும் பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ள சட்டவிரோதக் குப்பைக் கொட்டலைக் கட்டுப்படுத்த இந்தக் கட்சி இவ்வாறான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.
அதன்படி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரும் வகையில் சரியான தகவல்களை வழங்கும் பொதுமக்களுக்கு 5,000 பவுண்டுகள் வரை ‘காசு வெகுமதி’ வழங்கப்படும்.
வீடுகளில் உள்ள பழைய கட்டில்கள், பீரோக்கள் போன்ற பெரிய அளவிலான கழிவுகளை (Bulky waste) அகற்றுவதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை 5 பவுண்டுகளாக (£5) குறைக்க உள்ளூராட்சி சபைகள் ஊக்குவிக்கப்படும்.
தற்போது இதற்கு 30 முதல் 40 பவுண்டுகள் வரை வசூலிக்கப்படுகிறது.
குப்பைகளைச் சட்டவிரோதமாகக் கொட்டுபவர்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகையை 2,500 பவுண்டுகளாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்கப் புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் மட்டும் 1.26 மில்லியன் சட்டவிரோதக் குப்பைக் கொட்டல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது முந்தைய ஆண்டை விட 9% அதிகமாகும்.
இந்நிலையில் இவ்வாறான நிலையை கட்டுப்படுத்துவதற்கு லிபரல் கட்சி இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.













