பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர், அமெரிக்காவிற்கான தூதுவர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணை எதனையும் அவர் எதிர்கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதுவராக லோார்ட் மண்டல்சனை (Lord Mandelson) நியமிக்கும் விவகாரத்தில், பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தவறான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணையைத் தவிர்க்கும் வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.
தூதுவர் நியமனத்திற்கான ‘வெட்டிங்’ (Vetting) எனும் தகுதிகாண் நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டதாகவும், வெளியுறவுத்துறை அதிகாரிகள் மீது எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என்றும் பிரதமர் ஸ்டார்மர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த விவகாரத்தில் அவர் உண்மையை மறைத்து நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாக எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி குற்றம் சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து ‘நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு’ (Privileges Committee) விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவி கெமி பேடனோக் (Kemi Badenoch) கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.
அரசாங்கத் தரப்பில் 335 வாக்குகளும் எதிர்க்கட்சி தரப்பில் 223 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில்
112 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த விசாரணை கோரும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
அரசாங்கத் தரப்பில் பெருமளவிலான உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த போதிலும், ஆளும் தொழிற்கட்சியின் (Labour) 14 உறுப்பினர்கள் தமது கட்சித் தலைமையின் உத்தரவை மீறி, விசாரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
மேலும் 53 தொழிற்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பது “உண்மையை மறைக்கும் செயல்” (Cover-up) போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் எனச் சில தொழிற்கட்சி உறுப்பினர்களே கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்கள் நாடாளுமன்றத்தை வேண்டுமென்றே தவறாக வழிநடத்தினால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்பது பிரித்தானிய அமைச்சரவை விதியாகும்.
எவ்வாறாயினும், தற்போதைய வாக்கெடுப்பு முடிவின் மூலம் பிரதமர் ஸ்டார்மர் இந்த நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக மீண்டுள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியுடன் இணைந்து லிபரல் டெமக்ராட்கள், எஸ்.என்.பி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.














