இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 61 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு.
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில், வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 6,146,110 ரூபா நிதியைச் சட்டவிரோதமான முறையில் செலவிட்டு மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, மேலதிக விசாரணைக்காக வழக்கினை ஜூன் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றப்பத்திரிகையில், அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விரிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














