நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்கள் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கான காரணங்கள் குறித்து விளக்கமளித்தார்.
அதிக விலைக்கு எரிபொருளை இறக்குமதி செய்து, பழைய முறையிலேயே அதன் பயன்பாடு தொடருமானால் நாட்டிலிருந்து டொலர்கள் வெளியேறுவது மேலும் அதிகரிக்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாகவே, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் தொகை மாதந்தோறும் பல மடங்கு அதிகரித்து வருவதை ஜனாதிபதி புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்:
பெப்ரவரி மாதம் 98 மில்லியன் டொலராக இருந்த செலவு, மே மாதத்தில் 522 மில்லியன் டொலராக (சுமார் 6 மடங்கு) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகச் சந்தை நிலவரப்படி ஒரு லீற்றர் டீசலின் விலை 720 ரூபாயாக உள்ளது. இருப்பினும், அரசாங்கம் 100 ரூபாய் சுமையை ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு 392 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.
அரசாங்கத்தின் மானியத்தையும் சேர்த்து கூட்டுத்தாபனத்திற்கு 492 ரூபாயே கிடைக்கிறது.
இது பாரிய நட்டத்தை உருவாக்குவதோடு, இதனை நீண்ட காலத்திற்குத் தொடர முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் 95 சதவீதமான மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், திறைசேரியிலிருந்து தொடர்ச்சியாகப் பணம் வழங்கி எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையைப் பராமரிக்க முடியாது என்றும், அந்த நிறுவனங்களை வினைத்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த கால அரசாங்கங்களின் முறையற்ற நிர்வாகத்தால் ஏற்பட்ட 84 பில்லியன் ரூபாய் நட்டத்தை தற்போதைய அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், பொருளாதாரத்தைச் சவால்களுக்கு மத்தியில் நிர்வகிக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.













