லண்டனில் இந்த சனிக்கிழமை ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள இரு வேறுபட்ட போராட்டங்களினால் ஏற்படக்கூடிய மோதல்களைத் தவிர்க்க, பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்கொட்லாந்து யார்ட் (Scotland Yard) மேற்கொண்டுள்ளது.
வன்முறை அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பொலிஸார் இதுவரை இல்லாத அளவிலான “உயர்மட்டக் கட்டுப்பாடுகளை” விதிக்கத் தீர்மானித்துள்ளனர்:
அதன்படி, பாதுகாப்பிற்காக 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் களமிறக்கப்படவுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கவச வாகனங்கள் (Armoured vehicles) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களைக் கண்காணிக்க ட்ரோன்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
மத்திய லண்டனின் வெவ்வேறு பகுதிகளில் இரு பெரும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்த இரு தரப்பினரும் மோதிக்கொள்வதைத் தவிர்க்க அவர்களைத் தனித்தனியாகப் பிரித்து வைப்பதே பொலிஸாரின் பிரதான சவாலாக உள்ளது.
அதேவேளையில், வெம்பிளி மைதானத்தில் நடைபெறும் FA கிண்ண கால்பந்து இறுதிப் போட்டிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகை தரவுள்ளதால் பொலிஸாருக்கு மேலதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
நிலைமை குறித்துக் கவலை வெளியிட்டுள்ள பிரதி உதவி ஆணையர் ஜேம்ஸ் ஹர்மன், “இந்த நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்தினாலும், போராட்டங்களைத் தடை செய்யுமாறு கோருவதற்குப் போதுமான சட்ட ரீதியான காரணங்கள் இல்லை” எனத் தெரிவித்தார். இதனால், எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியைப் பேணப் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.














