பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் தலைமையில், பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷனவின் பங்கேற்புடன் நடைபெற்ற நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக் கூட்டத்தில், சிறுவர்கள் மற்றும் பெண்களின் நலன் சார்ந்த பல அதிரடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பகற்பராமரிப்பு நிலையங்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு
சிறு பிள்ளைகளின் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 வயது முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள், பதிவுசெய்யப்பட்ட பகற்பராமரிப்பு நிலையங்களில் (Daycare centres) சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டில் பணியாற்றும் பெற்றோரின் மாதாந்த வருமானம் 400 அமெரிக்க டொலர்களை (USD 400) தாண்டும் குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படும்.
இதற்காக ஆரம்பகட்டமாக 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இறுதி ஒப்புதலின் பின்னர் மாவட்ட செயலகங்கள் ஊடாக இந்த நிதியுதவி நேரடியாகப் பராமரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும்.
பெண் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கிராமிய மகப்பேறு உத்தியோகத்தர் நியமனம்
பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில், 50 பெண் உப பொலிஸ் பரிசோதகர்கள் (Sub-Inspectors) மற்றும் 2,600 பெண் பொலிஸ் காவலர்களை (Constables) இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழ் மொழியில் பேசக்கூடிய பெண் பொலிஸாரை இணைப்பதற்காகச் சமூக ஊடகங்கள் வாயிலாக விசேட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸ் தரப்பு தெரிவித்தது.
இதேவேளை, தமிழ் பேசும் கிராமிய மகப்பேறு உத்தியோகத்தர்களின் (Public Health Midwives) வெற்றிடங்களை நிரப்ப விசேட கவனம் செலுத்துமாறும், உயர்தரம் (A/L) முடித்த தமிழ்மொழி மூல மாணவர்களுக்கிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களினதும் சிறுவர் விபரங்களை ஒன்றிணைத்து, ‘டிஜிட்டல் பொருளாதார அமைச்சின்’ பங்களிப்புடன் இந்த ஆண்டிற்குள் (2026) ஒரு தேசிய டிஜிட்டல் தரவு அமைப்பு உருவாக்கப்படும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் தெரிவித்தார்.
துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அமைச்சருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோக வழக்குகளில் சட்டத்தை விரைவாக நிலைநாட்டுவதற்கு பிரதேச செயலகங்கள், நன்னடத்தை திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து ஒரே குழுவாகச் செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
“பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோக சம்பவங்கள், சட்ட நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள் அல்லது குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் எந்நேரத்திலும் எனது தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்திற்கு நேரடியாகப் புகார் அளிக்கலாம். அதற்குத் துரிதமான தலையீடு வழங்கப்படும்.”
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய சலுகைகள்
எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் (Budget) பின்வரும் முன்மொழிவுகளை உள்ளடக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை அதிகரித்தல்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்குப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (Contributory pension scheme) அறிமுகப்படுத்துதல்.
அனைத்து முன்பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச காலை உணவை வழங்குதல்.
இவற்றுக்கு மேலதிகமாக, அரச சேவையில் உள்ள பெண் ஊழியர்களின் இடமாற்றங்களின் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் முன்பள்ளிகள், பகற்பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குமுறைப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.













