கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபுகொட ஸ்ரீ வர்தனாராம விகாரையின் வருடாந்த மகா வெசாக் பெரஹரா (ஊர்வலம்) இன்றைய தினம் (23) நடைபெறவுள்ளதால், அப்பகுதியில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று இரவு 7:00 மணிக்கு விகாரையிலிருந்து புறப்படும் இந்த பெரஹரா, கந்தானை நகர மத்தியினூடாக கம்பஹா – கந்தானை வீதி மற்றும் கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதிகளில் வீதி உலா வந்து மீண்டும் விகாரையைச் சென்றடையவுள்ளது.
இதன் காரணமாக இரவு 7:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை பெரஹரா கம்பஹா – கந்தானை வீதியின் ராகம வெவ சந்தியிலிருந்து நீர்கொழும்பு வீதியின் கணேமுல்ல சந்தி வரை பயணிக்கவுள்ளது.
இரவு 10:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 1:00 மணி வரை கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கந்தானை கணேமுல்ல சந்தியிலிருந்து ஆனியாகந்த வைத்தியசாலை சந்தி வரை பெரஹரா பயணிக்கவுள்ளது.
பெரஹரா கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் காலப்பகுதியில் (இரவு 10:30 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை), கணேமுல்ல சந்தியிலிருந்து ஆனியாகந்த வைத்தியசாலை வரை கொழும்பு நோக்கிய திசையிலான இரு வழித்தடங்களும் முழுமையாக மூடப்படவுள்ளன.
குறித்த வீதிப் பகுதி மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில், அவ்வீதிகளினூடாகப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள சாரதிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் சாத்தியமான வரை மாற்று வழிகளைப் (Alternative Routes) பயன்படுத்துமாறு கந்தானை பொலிஸார் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.














