யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது என ஆளுநர் செயலகத்தால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண உயர் நீதிமன்றத்திலிருந்து பதுளை சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா கடந்த 31ஆம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நீதிபதியின் இடமாற்றம் அரசியல் அழுத்தம் காரணமாக நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் , வடக்கு ஆளுநர் உங்கள் அரசாங்கத்தின் அமைச்சர் உட்பட சில அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தலையீட்டை நாடினார் என்றும் நாங்கள் நம்பத்தகுந்த முறையில் அறிந்துள்ளோம் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலும் குறிப்பிட்டுள்ள நிலையிலையே , ஆளுநர் செயலகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.













