பிரிட்டன் அரசாங்கம் தனது பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால், நாட்டின் பெரும்பாலான பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் கடும் நிதி இழப்புகளைச் சந்தித்து வருவதாகப் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஆயுதப்படைகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பிரதமர் கீர் ஸ்டார்மர் ஒரு முக்கிய பாதுகாப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
எனினும், இந்த மாற்றங்களுக்கு எவ்வாறு நிதியளிக்கப்படும் என்பதை அவரது அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
உண்மையில் இந்த பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் கடந்த ஆண்டு இலையுதிர்காலத்திலேயே (Autumn) வெளியிடப்பட்டிருக்க வேண்டிய நிலையில் இராணுவத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதியின் அளவு குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் நிதி அமைச்சகத்திற்கும் இடையே உடன்பாடு எட்டப்படாததே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே இத்திட்டம் வெளியாகும் திகதி தொடர்ந்தும் காலதாமதமாகின்றது.














