2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய அணியில் நிஷான் வேலுப்பிள்ளை (Nishan Velupillay) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஏ-லீக்கில் மெல்போர்ன் விக்டரி அணிக்காக விளையாடும் 25 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, தலைமைப் பயிற்சியாளர் டோனி போபோவிக்கின் 26 பேர் கொண்ட அவுஸ்திரேலிய இறுதி அணியில் திங்களன்று இடம்பெற்றார்.
2026 ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா, துருக்கி, அமெரிக்கா மற்றும் பராகுவே ஆகியவற்றுடன் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அவர்களின் தொடக்க ஆட்டம் ஜூன் 13 அன்று வான்கூவரில் உள்ள பிசி பிளேஸில் துருக்கிக்கு எதிராக நடைபெறுகிறது.
நிஷான் வேலுப்பிள்ளை மெல்போர்னில் பிறந்து வளர்ந்தார்.
முல்கிரேவில் உள்ள மேசனோட் கல்லூரியில் பயின்ற அவர், பின்னர் கிளென் ஈரா கால்பந்து கழகத்தின் இளையோர் அணிகளில் படிப்படியாக முன்னேறி, இறுதியில் மெல்போர்ன் விக்டரி அகாடமியில் சேர்ந்தார்.
2024 ஒக்டோபரில், சீனாவுக்கு எதிரான 2026 உலகக் கிண்ண தகுதிப் போட்டிக்காக போபோவிச் அவரை அழைத்தபோது, அவர் தனது மூத்த சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்டார்.
83 ஆவது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய அவர், ஏழு நிமிடங்கள் கழித்து கோல் அடித்து 3-1 என்ற வெற்றியை உறுதி செய்தார்.
அந்த அறிமுகப் போட்டியே, அவுஸ்திரேலிய கால்பந்துக்கும் தமிழ் புலம்பெயர் சமூகத்திற்கும் அவரை ஒரே அளவில் அறிமுகப்படுத்தியது.
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியத் தந்தைக்கும், ஆங்கிலோ-இந்தியத் தாய்க்கும் மகனாகப் பிறந்த வேலுப்பிள்ளையின் இந்தத் தேர்வு, இலங்கைப் பாரம்பரியம் கொண்ட கால்பந்து வீரர்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமைகிறது.
















