அமெரிக்கத் தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்ததைக் காட்டுவதாகக் கூறப்படும் உளவுத்துறைத் தகவல்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமையன்று (16) பொதுவெளியில் வெளியிட்டார்.
2020-ஆம் ஆண்டு தேர்தலில் தான் தோல்வியடைந்த நிலையில், அப்போதைய வாக்குப்பதிவை பெய்ஜிங் மாற்றியமைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடு தெரிவித்திருந்த போதிலும், தேர்தல் பாதுகாப்பு குறித்த தனது நீண்டகால விமர்சனங்களை அவர் இதன் மூலம் மீண்டும் முன்னெடுத்துள்ளார்.
எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்களுக்கு முன்னதாக, தேர்தல் பாதுகாப்பை ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக முன்னிறுத்துவதற்கான ட்ரம்பின் முயற்சியை அந்த 25 நிமிட உரை அடிக்கோடிட்டுக் காட்டியது.
அந்தத் தேர்தல்களில், குடியரசுக் கட்சியினர் தங்களது நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருப்பதோடு, ஒன்று அல்லது இரண்டு அவைகளின் மீதான கட்டுப்பாட்டையும் இழக்கும் சாத்தியத்தையும் எதிர்கொள்ள நேரிடும்.
அமெரிக்கத் தேர்தல்களில் வாக்காளர் மோசடி என்பது அரிதான ஒன்று என்று நீண்டகாலமாகத் தெரியவந்திருந்த போதிலும், வாக்காளர் அடையாளம் மற்றும் குடியுரிமை தொடர்பான புதிய நிபந்தனைகளை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றுமாறு காங்கிரஸில் உள்ள சக குடியரசுக் கட்சியினரை ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
வாக்காளர் பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் பெயர்கள், முகவரிகள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய 220 மில்லியன் அமெரிக்க வாக்காளர்களின் விவரங்களைச் சீனா சட்டவிரோதமாகப் பெற்றிருந்ததைக் காட்டும் ரகசியத் தகவல்களைத் தான் பொதுவெளியில் வெளியிடவிருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறினார்.
சீனாவின் செயல்பாடுகளின் அளவு குறித்த தகவல்களை அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே மறைத்ததாகவும் அவர் உறுதியாகக் கூறினார்.
2020-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு தொடர்பான எந்தவொரு தொழில்நுட்ப அம்சத்தையும் — வாக்காளர் பதிவு, வாக்குச்சீட்டுகள், வாக்கு எண்ணிக்கை அல்லது தேர்தல் முடிவுகள் உட்பட — மாற்றியமைக்க எந்தவொரு வெளிநாட்டுத் தரப்பும் முயற்சித்ததற்கோ அல்லது அதில் வெற்றிபெற்றதற்கோ எந்த அறிகுறியும் இல்லை என்று 2021-இல் அமெரிக்க உளவுத்துறை சமூகம் வெளியிட்ட வகைப்படுத்தப்படாத (unclassified) மதிப்பீடு தெரிவிக்கிறது/
அவரது குற்றச்சாட்டுகள் இந்த மதிப்பீட்டிற்கு முரணாக உள்ளன.
இந்த மதிப்பீடு, அப்போதைய ட்ரம்பின் தேசிய உளவுத்துறை பணிப்பாளரும், தற்போதைய அவரது சிஐஏ பணிப்பாளருமான ஜோன் ராட்க்ளிஃபின் கீழ் நடத்தப்பட்டது.
ட்ரம்பின் உரைக்கு முன்னதாக, சீனா குறித்த தகவல்களை வெளியிடுவது தவறான வழிகாட்டுதலாக அமையக்கூடும் என்று சில வெள்ளை மாளிகை அதிகாரிகள் கவலை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வர்த்தகப் போருக்குப் பிறகு சீராகி வந்த உறவை, சீனா குறித்த ட்ரம்ப்பின் கடுமையான பேச்சு சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்தியது.
வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து செப்டம்பர் மாதத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ட்ரம்பின் இந்த அறிக்கைக்கு பதிலளித்துள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு சாங், “அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனா ஒருபோதும் தலையிட்டதில்லை; இனிமேலும் தலையிடாது,” என்று தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் குறித்து பல ஆண்டுகளாக ட்ரம்ப் சந்தேகங்களை எழுப்பி வருகிறார்; 2020-ல் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனிடம் தான் தோல்வியடைந்தது முறைகேடானது என்று அவர் பொய்யாகக் கூறி வருகிறார்.
தபால்மூல வாக்குப்பதிவில் மோசடிகள் மலிந்துள்ளன, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்றவை மற்றும் குடியுரிமை பெறாதவர்கள் வாக்களிப்பது பரவலாக நடைபெறுகிறது என்பது போன்ற பிற பொய்யான குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
எனினும், 2020 தேர்தலில் பெரிய அளவிலான மோசடி நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என எண்ணற்ற நீதிமன்றங்களும் வாக்கு மறு எண்ணிக்கைகளும் கண்டறிந்தன.














