இலங்கையின் ரூமேஷ் பத்திரகே (Rumesh Pathirage), வியாழக்கிழமை (05) 2026 ரோம் டைமண்ட் லீக் போட்டியில் (Rome Diamond League) 92.62 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, இந்தப் சீசனில் மிகப்பெரிய ஈட்டி எறிதல்களில் சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.
தனது இரண்டாவது முயற்சியில் பதிவு செய்யப்பட்ட அந்த எறிதல், பத்திரகேவுக்கு உலக அளவிலான முன்னிலையையும் ஒரு போட்டி சாதனையையும் பெற்றுத் தந்ததுடன், அவரது விளையாட்டு வாழ்வில் முதல் முறையாக 90 மீட்டர் தூரத்தையும் கடக்க உதவியது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் பதிவுசெய்த 92.97 மீட்டருக்கு அடுத்தபடியாக, இது ஒரு ஆசிய வீரரின் இரண்டாவது மிக நீண்ட முயற்சியாகவும் அமைந்தது.
இந்த முயற்சியின் மூலம், பாகிஸ்தானின் நதீம், தாய்வானின் செங் சாவோ-ட்சுன் மற்றும் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஆகியோருடன் பட்டியலில் இணைந்து, 90 மீட்டரைத் தாண்டிய நான்காவது ஆசிய ஈட்டி எறி வீரர் என்ற பெருமையையும் ரூமேஷ் பத்திரகே பெற்றார்.
பத்திரகே இந்த சீசனில் ஏற்கனவே மிகவும் சீராக ஈட்டி எறியும் வீரர்களில் ஒருவராக இருந்து வந்தார்.
தற்போது ரோமில் அவர் காட்டிய திறமை அவரை உலக ஈட்டி எறிதலில் முன்னணி வீரர்களின் வரிசையில் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.
23 வயதான அவர் ஏற்கனவே தனது தேசிய சாதனையை வைத்திருந்தார்,
ஆனால் ரோமில் பெற்ற இந்த வெற்றி, அவர் நேசிக்கும் தாய்நாட்டில் அவரது புகழை இன்னும் உயரத்துக்கு கொண்டு சேர்த்துள்ளது.
ரூமேஷ் பத்திரகேவின் செயல்பாட்டில் நேற்றைய தினம் இருந்த ஒரே குறை, அவரால் இரண்டு சரியான முயற்சிகளை மட்டுமே மேற்கொள்ள முடிந்தது என்பதுதான், ஆனால் அது அவரது உற்சாகத்தை ஒரு சிறிதும் குறைக்காது.
அவர் தனது முதல் எறிதலிலேயே உடனடியாக முன்னிலை பெற்றார்; ஈட்டியை 84.49 மீட்டர் என்ற கணிசமான தூரத்திற்கு எறிந்தார்.
இருப்பினும், இரண்டாவது முயற்சிதான் ரோம் நகரை உண்மையிலேயே அதிர வைத்தது.
கூட்டம் ஆரவாரம் செய்ய, அந்த ஈட்டி 92.62 மீட்டர் என்ற பிரம்மாண்டமான தூரத்தை எட்டியது – இது இலங்கையின் புதிய சாதனையாகும்.
இலங்கை வீரரின் இந்த புதிய சாதனையானது, 20 ஆண்டுகளாக நிலைத்திருந்த நோர்வேயின் ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சனின் போட்டி சாதனையை (90.34) 2 மீட்டருக்கும் மேலாக முறியடித்தது.
எவ்வாறெனினும், தரங்க இதுவரை ஆசியாவிற்கு வெளியே இன்னும் எந்த முக்கியப் பட்டப் பதக்கங்களையும் வெல்லவில்லை.
ஆனால் இந்த ஆட்டத்திறன் தொடர்ந்தால், அடுத்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் நிச்சயம் முன்னணியில் இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
















