அணித் தலைவர் ஷுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் அபாரமான சதங்களும், சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதாரின் சிறப்பான அறிமுக ஆட்டமும் திங்களன்று நியூ சண்டிகரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரு மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தன.
முதல் இன்னிங்ஸில் ராகுல் மற்றும் கில் ஆகியோரின் சதங்கள் இந்திய அணியை 564/8 என்ற வலுவான ஓட்ட இலக்கினை எட்ட வழிநடத்தியது.
அதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுதார் (6/33) மற்றும் வொஷிங்டன் சுந்தர் (4/36) ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு, ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியை உறுதி செய்தது.
இருப்பினும், இந்தப் போட்டி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரின் ஒரு பகுதியாக இல்லாததால், தற்போது ஆறாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் WTC தரவரிசையில் இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
கே.எல். ராகுலுடன் இணைந்து 41 ஓட்டங்கள் என்ற அதிரடியான தொடக்கக் கூட்டணியை அமைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் (32 பந்துகளில் 24 ஓட்டங்கள், ஐந்து பவுண்டரிகள்) ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தார்.
பின்னர் ராகுல், சாய் சுதர்சனுடன் (104 பந்துகளில் 81 ஓட்டங்கள், 13 பவுண்டரிகள்) இரண்டாவது விக்கெட்டுக்கு 139 ஓட்டங்கள் என்ற முக்கியமான கூட்டணியை அமைத்தார்.
கே.எல். ராகுல் தனது சொந்த மண்ணில் மூன்றாவது டெஸ்ட் சதத்தையும், ஒட்டுமொத்தமாக 12வது சதத்தையும் பதிவுசெய்தார்.
அவர் 165 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்தார்.
இருப்பினும், அடுத்த பந்திலேயே ஜியாவுர் ரஹ்மான் ஷரிஃபியால் (1/91) அவர் ஆட்டமிழந்தார்.
பின்னர், அணித் தலைவர் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் மற்றொரு வலுவான இணைப்பாட்டத்தை அமைத்து இன்னிங்ஸை நிலைப்படுத்தினர்.
கில் (103*) மற்றும் பந்த் (50*) ஆட்டமிழக்காமல் இருக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் 368/3 என்ற நிலையில் இருந்தனர்.
கில்-பந்த் கூட்டணி நான்காவது விக்கெட்டுக்கு 169 ஓட்டங்கள் சேர்த்தது.
கில் தொடர்ந்து 177 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 126 ஓட்டங்கள் எடுத்து, தனது 12வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.
பந்த் 121 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 81 ஓட்டங்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.
இதன்மூலம் இந்தியா 456/6 என்ற ஓட்ட எண்ணிக்கயை எட்டியது.
கீழ்வரிசை துடுப்பாட்ட வீரர்களான வொஷிங்டன் சுந்தர் (68 பந்துகளில் 52*ஓட்டங்கள், ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன்), மொஹமட் சிராஜ் (14 பந்துகளில் 22 ஓட்டங்கள், நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன்) மற்றும் மானவ் சுதார் (41 பந்துகளில் 28 ஓட்டங்கள், இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 564/8 என்ற ஓட்ட எண்ணிக்கையை எட்டி டிக்ளேர் செய்தது.
ஆப்கானிஸ்தான் சார்பில் பந்து வீச்சில் மொஹமட் சலீம் சஃபி (6/140) தனது விக்கெட்டுகளுக்காகக் கடுமையாகப் போராடினார்.
ஆனால் அவரது முயற்சிகள் பலனளித்ததால், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது ஆப்கானிஸ்தான் வீரர் ஆனார்.
பின்னர் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆப்கானிஸ்தான் துடுப்பெடுத்தாடி 113/5 என்ற மோசமான நிலையில் இருந்தது.
ரஹ்மத் ஷா (43*) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு மூன்றாவது நாள் மேலும் துயரத்துடன் தொடங்கியது.
அறிமுகப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய 10வது இந்திய வீரரான சுதார் (6/33), டெஸ்ட் அறிமுகப் போட்டியில் ஒரு இந்திய வீரரின் மூன்றாவது சிறந்த பந்துவீச்சு சாதனையைப் பதிவு செய்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில், ரஹ்மத் (135 பந்துகளில் 60 ஓட்டங்கள், ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன்) மற்றும் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (20) ஆகியோர் மட்டுமே ஆப்கானிஸ்தான் சார்பில் 20 ஓட்டங்களைக் கடந்தனர்.
பின்னர் இந்தியா, ஆப்கானிஸ்தானை ஃபாலோ-ஆன் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
மீண்டும், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர்.
சுந்தர் (4/36), குல்தீப் யாதவ் (3/30) மற்றும் சுதார் (1/29) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் இன்னும் மோசமாக விளையாடி, 112 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
செடிகுல்லா அடல் (80 பந்துகளில் 42ஓட்டம் , ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன்) மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் (24 பந்துகளில் 24 ஓட்டம், மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன்) ஆகியோர் மட்டுமே 20 ஓட்டங்களைக் கடந்தனர்.
இதன் மூலம் இந்திய அணியானது இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியானது, 2018-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை விஞ்சியுள்ளது.
இந்திய மண்ணில் இதைவிடப் பெரிய இன்னிங்ஸ் வெற்றி என்பது, 1958-ல் மேற்கிந்தியத் தீவுகள் இந்தியாவிற்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 336 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.
ஆசிய அணி ஒன்று பெற்ற மற்றொரு மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றி என்பது, லாகூரில் பாகிஸ்தான் நியூசிலாந்திற்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 324 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.
இந்தியாவின் அடுத்த போட்டி, நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகும்.













