அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரான்சின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டபோது, முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவிருக்கும் இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முறைப்படி கையெழுத்திட்டார்.
‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’ (Memorandum of Understanding) என்று அழைக்கப்படும் இந்த 14 அம்ச ஒப்பந்தம், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்காது என்று கூறுகிறது.
அத்துடன், அமெரிக்கா நிதி எதையும் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லையென்றாலும், ஈரானின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக 300 பில்லியன் டொலர் நிதியை இது உறுதி செய்கிறது.
இவ்விரு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் வெடித்த நான்கு மாதங்களுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் செயல்பாட்டின் அடிப்படையில் அமைந்தது என்று ட்ரம்ப் நிர்வாகம் விவரித்துள்ளது; இதன்படி, ஈரான் தனது கடமைகளை நிறைவேற்றினால் மட்டுமே பலன் பெறும்.
இந்த ஒப்பந்தத்தின் வாசகம் பல கேள்விகளுக்கு விடையளிக்காமலும், பல முக்கிய விவகாரங்களுக்குத் தீர்வு காணாமலும் இருந்தாலும், அதன் சில முக்கிய அம்சங்களைப் பற்றி நமக்குத் தெரிந்தவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1 ஆவது அம்சம்: அனைத்து முனைகளிலும் மோதலுக்கு முற்றுப்புள்ளி
லெபனான் உட்பட “அனைத்து முனைகளிலும்” இராணுவ நடவடிக்கைகளை “உடனடியாகவும் நிரந்தரமாகவும்” நிறுத்துவதாக அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் பங்காளிகள் அறிவிப்பார்கள் என்று அந்த ஒப்பந்தத்தின் முதல் பத்தி குறிப்பிடுகிறது.
அமெரிக்காவின் பார்வையில், ஹிஸ்புல்லாவிற்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் ஈரானுடனான ஒப்பந்தத்தை சீர்குலைக்கக்கூடும் என்று ட்ரம்ப் அதிகளவில் கவலை கொண்டுள்ளார்.
தெஹ்ரான், தன் பங்கிற்கு, லெபனான் போர்நிறுத்தத்தின் கீழ் வரும் என்று எதிர்பார்ப்பதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளது.
லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தால் அது புரிதலை மீறுவதாக அமையும் என்றும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்தார்.
இனிமேல் இரு தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கவோ அல்லது ஒருவரையொருவர் அச்சுறுத்தவோ மாட்டார்கள் என்றும், லெபனானின் “பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை” உறுதி செய்வார்கள் என்றும் அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.
இறுதி ஒப்பந்தம் மோதலுக்கு நிரந்தர முடிவைக் கொண்டுவரும் என்று அந்த ஆவணம் கூறுகிறது.
இந்த விடயத்திற்கு இஸ்ரேல் எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
2 ஆவது அம்சம்: உள்விவகாரங்கள் மீதான இறையாண்மை
அமெரிக்க அதிகாரிகளுடனான தொலைபேசி உரையாடலின்போது செய்தியாளர்களிடம் வார்த்தைக்கு வார்த்தை வாசிக்கப்பட்ட அந்த ஆவணத்தின் வாசகம், அமெரிக்காவும் ஈரானும் “ஒன்றையொன்று இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கும்” என்றும், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பார்கள் என்றும் குறிப்பிடுகிறது.
இது ஈரானிய அதிருப்திக் குழுக்களால் எதிர்மறையாகவே பார்க்கப்படக்கூடும்.
ஈரானிய நகரங்கள் முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றபோது, ”உதவி வரவிருக்கிறது” என்று ஈரானியப் போராட்டக்காரர்களுக்கு ட்ரம்ப் முன்னதாக உறுதியளித்திருந்தார்.
3 ஆவது அம்சம்: நீட்டிக்கக்கூடிய 60 நாள் காலக்கெடு
அந்த ஆவணத்தின் மூன்றாவது அம்சத்தின்படி, அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அதிகபட்சம் 60 நாட்கள் காலக்கெடுவை ஏற்றுக்கொண்டுள்ளன.
எனினும், பரஸ்பர ஒப்புதலுடன் இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க முடியும்.
இரு நாடுகளின் தலைவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, அந்த 60 நாள் காலக்கெடுவிற்கான கணக்கீடு இப்போது தொடங்கியுள்ளது.
பிரான்சில் உள்ள வெர்சாய்ஸ் அரண்மனையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற G7 உச்சிமாநாட்டிற்குப் பிந்தைய விருந்தின்போது, ஈரான் தொடர்பான அந்த ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை உறுதிபடுத்தியுள்ளது.
ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனும் இதில் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
முன்னதாக, இந்த வார இறுதியில் ஜெனீவாவில் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா நடைபெறும் என்று ட்ரம்ப் மற்றும் ஈரானிய அதிகாரிகள் இருவரும் தெரிவித்திருந்தனர்.
அந்த நிகழ்வு இப்போது திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
4 ஆவது அம்சம்: முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவுள்ள அமெரிக்கா
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதும், ஈரான் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகை மற்றும் ஏதேனும் இடையூறுகள் அல்லது தடைகள் ஆகியவற்றை நீக்க அமெரிக்கா தொடங்கும்.
அந்த ஒப்பந்தம் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சின் தகவல்படி, 30 நாட்களுக்குள் இந்த முற்றுகை முழுமையாக முடிவுக்கு வரும்.
இக்காலகட்டத்தில், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தனது கப்பல் போக்குவரத்தை மீண்டும் எந்த அளவிற்குச் சீரமைக்கிறதோ, அதற்கு ஏற்ற விகிதத்தில் ஈரான் துறைமுகங்கள் வழியாகக் கப்பல்கள் செல்ல அமெரிக்கா அனுமதிக்கும்.
இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாட்களுக்குள், ஈரானுக்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
நடைமுறையில், பெப்ரவரி 28 அன்று மோதல்கள் தொடங்குவதற்கு முன்பு அமெரிக்க இராணுவம் கொண்டிருந்த நிலை மற்றும் அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்த வளங்கள் ஆகியவற்றின் நிலைக்கு அது மீண்டும் திரும்பும் என்பதை இது குறிக்கிறது.
5 ஆவது அம்சம்: ஹார்முஸ் நீரிணை வாயிலான கட்டணமில்லா அனுமதி
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதும், ஹார்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை எவ்விதக் கட்டணமுமின்றி அனுமதிப்பதற்கு, ஈரான் தனது முழு முயற்சியையும் பயன்படுத்தி ஏற்பாடுகளைச் செய்யும் என்று அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி குறிப்பிடுகிறது.
போர் தொடங்கியதிலிருந்தும், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டு உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்ததிலிருந்தும், இது அமெரிக்காவின் ஒரு முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
தொழில்நுட்ப மற்றும் இராணுவ ரீதியான தடைகளை நீக்குதல் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, அந்த வழியினூடான போக்குவரத்து உடனடியாக தொடங்கும் என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்பதை, முன்னதாக நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தினர்.
நீண்ட கால அடிப்படையில், ஹார்முஸ் நீரிணையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த விரிவான ஒப்பந்தத்தை உருவாக்க ஈரான் ஓமன் மற்றும் பிற வளைகுடா நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
ஈரான் தனது உரிமைகளை “தீவிரமாக” நிலைநாட்ட முயலும் என்று அமெரிக்கா கருதுகிறது; அதே வேளையில், கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருக்கும் ஒரு எதிர்காலச் சூழலை வளைகுடா நாடுகள் “ஒருபோதும்” ஏற்றுக்கொள்ளாது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
6 ஆவது அம்சம்: ஈரானின் மறுசீரமைப்புக்கான நிதி
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஆறாவது அம்சம், ஈரானின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக, குறைந்தது 300 பில்லியன் டொலர் (224 பில்லியன் பவுண்டுகள்) மதிப்பிலான தெளிவான மற்றும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தை அமெரிக்காவும் பிராந்தியக் கூட்டாளிகளும் இணைந்து உருவாக்கும் என்று கூறுகிறது.
இறுதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 60 நாட்களுக்குள் அதற்கான இறுதி நடைமுறை முறைமை குறித்து ஒப்புதல் அளிக்கப்படும்.
அத்துடன், அனைத்து உரிமங்கள், விதிவிலக்குகள் மற்றும் அனுமதிகளும் அமெரிக்காவால் வழங்கப்படும்.
இருப்பினும், அமெரிக்கா இதில் நிதி ரீதியாக ஈடுபடும் என்று இதற்கு அர்த்தமில்லை.
ஈரானுக்கு “ஒரு பைசா கூட” பணம் செலுத்தவோ அல்லது அந்த நிதிக்கு பங்களிக்கவோ அமெரிக்கா கடமைப்பட்டிருக்கவில்லை என்று ஒரு அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டார்.
ஒரு கற்பனையான உதாரணமாக ஈரான் ஒழுங்காக நடந்துகொண்டால், அமெரிக்காவின் ஆசியுடன் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் ஈரானில் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க முடியும் என்று அந்த அதிகாரி கூறினார்.
ஈரானுக்கு நேரடியாகப் பணம் செலுத்தப் போவதில்லை என்பதை அமெரிக்கப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக ட்ரம்ப்பும் மற்ற அதிகாரிகளும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இது, ஈரான் மற்றும் ஒபாமா நிர்வாகத்திற்கு இடையே 2015 இல் ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணானது என்று நிர்வாகம் கூறுகிறது.
7 ஆவது அம்சம்: ஈரான் மீதான தடை நீக்கம்
ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களில் உள்ளவை மற்றும் அமெரிக்காவால் தன்னிச்சையாகச் செயல்படுத்தப்பட்டவை உட்பட, ஈரானுக்கு எதிரான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரும்.
இருப்பினும், அதற்கான காலக்கெடு தெளிவாக இல்லை.
இறுதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கால அட்டவணை ஒப்புக்கொள்ளப்படும் என்றும், ஆனால் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் இப்பிரச்சினையை உடனடியாகக் கையாள்வதற்கான தங்கள் நோக்கங்களை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றும் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
ஈரான் தடைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் ‘ஆப்ரேஷன் எகனாமிக் ஃபியூரி’ என்ற அமெரிக்க நடவடிக்கை, தெஹ்ரானை உலகளாவிய நிதி அமைப்பிலிருந்து துண்டிக்க முயன்று வருகிறது.
8 ஆவது அம்சம்: அணு ஆயுதங்கள் இல்லை
ஈரான் அணு ஆயுதத்தைக் கொள்முதல் செய்யவோ அல்லது வாங்கவோ கூடாது என ஒப்புக்கொண்டுள்ளது, மேலும் தெஹ்ரான் ஏற்கனவே வைத்திருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கையாள்வதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
எனினும் அதனை கையாளும் முறை ஒப்பந்தத்தில் தெளிவாக இல்லை. இந்த வழிமுறை, அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் பரஸ்பர ரீதியாக ஒப்புக்கொள்ளப்படும் என்றும், ஆனால் குறைந்தபட்சம், அது சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) மேற்பார்வையின் கீழ், இருக்கும் இடத்திலேயே கலப்பு முறையில் தரம் குறைக்கப்படும் என்றும் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்ரேஷன் எபிக் ஃபியூரியைத் தொடங்கியதன் மூலம், ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதைத் தடுப்பதே தனது நோக்கத்தில் “99%” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் செயல்திறன் அடிப்படையிலானது என அமெரிக்கா விவரித்துள்ளது.
9 ஆவது மற்றும் 10 ஆவது அம்சங்கள்: தற்போதைய நிலையை தொடர இணக்கம்
செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான விவகாரம் கையாளப்படும் வரை தங்கள் அணுசக்தித் திட்டத்தைப் பொறுத்தமட்டில் தற்போதைய நிலையையே தொடர அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஒப்பந்தத்தின் பின்வரும் இரண்டு பகுதிகள் குறிப்பிடுகின்றன.
நடைமுறையில், இதன் பொருள் என்னவென்றால், அமெரிக்கா புதிய தடைகளை விதிக்காது என்பதாகும்.
அதேவேளையில், மசகு எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள், போக்குவரத்து போன்ற அதனுடன் தொடர்புடைய சேவைகளை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான விலக்குகளை அது வழங்கும்.
11 ஆவது அம்சம்: முடக்கப்பட்டுள்ள ஈரான் நிதிகள்
இந்தப் பிரச்சினை பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு முக்கிய தடையாக இருந்து வந்துள்ளது.
ஈரான் தனது முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தது; இது அந்நாட்டிற்கு மற்றொரு பொருளாதார வாழ்வாதாரமாக அமையும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதும், முடக்கப்பட்ட அல்லது கட்டுப்பாட்டில் உள்ள நிதியை முழுமையாக விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொள்வதாகவும், அதற்கான நடைமுறைகள் பேச்சுவார்த்தைகளின்போது தீர்மானிக்கப்படும் என்றும் அந்த ஆவணத்தின் 11 அம்சம் குறிப்பிடுகிறது.
அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவது போன்ற ஒப்பந்தத்தின் அம்சங்களை ஈரான் செயல்படுத்தும்போது, அதை ஊக்குவிக்கும் விதமாக, ஒப்பந்தத்திற்குப் பிந்தைய பேச்சுவார்த்தைகள் தொடரும் அதே வேளையில் சில சொத்துக்கள் விடுவிக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
12,13 மற்றும் 14 ஆவது அம்சங்கள் : கண்காணிப்பு, இறுதிப் பேச்சுவார்த்தைகள்
இந்த ஒப்பந்தம் எவ்வாறு நிறைவேறும் என்பதற்கான செயல்பாட்டு விவரங்களை ஆவணத்தின் இறுதி சில அம்சங்கள் விவரிக்கின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செயலாக்கத்தையும், எதிர்கால ஒப்பந்தத்திற்கு இணங்குவதையும் கண்காணிக்க அமெரிக்காவும் ஈரானும் ஒரு செயல்முறையை உருவாக்கும் என்று அவை கூறுகின்றன.
இருப்பினும் நடைமுறையில் இது எப்படி இருக்கும் என்பது தெளிவாக இல்லை.
பின்னர், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, அதன் செயலாக்கம் தொடங்கியவுடன், அமெரிக்காவும் ஈரானும் ஒரு இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும்.
இறுதியாக ஒரு இறுதி ஒப்பந்தம், ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் அங்கீகரிக்கப்படும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.














