இலங்கை வரலாற்றில் அண்மைக்காலத்தில் மீட்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்களில் ஒன்றாக, 10 கோடி ரூபாவிற்கும் அதிக சந்தை மதிப்புடைய ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையை முச்சக்கரவண்டியொன்றில் கடத்திச் சென்ற 38 வயதுடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் கோனஹேன விசேட அதிரடிப்படையின் விசேட செயற்பாட்டு பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தற்பொழுது வெளிநாட்டில் தலைமறைவாக இருந்துகொண்டு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வரும் பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவர்களான ‘பொடி சுரேஷ்’ மற்றும் ‘சங்க சமீர’ ஆகியோரின் இலங்கையிலுள்ள போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் பிரதான சூத்திரதாரி என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசேட அதிரடிப்படையினரின் உளவுப்பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, நேற்று (19) கடவத்தை, புனித அந்திரேயா அக்வில்லினோ தேவாலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இந்த அவசரச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அந்த வீதியால் வந்த சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டியை மறித்துச் சோதனையிட்ட போதே, அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பின்வரும் பொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் முழுமையாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.
06 கிலோ 288 கிராம் , போதைப்பொருளைச் சிறு பொதிகளாக எடைபோடுவதற்குப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் மின்சார தராசு.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகச் சம்பாதித்த பெருமளவிலான ரொக்கப் பணம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் கணேமுல்ல, கேந்தலியத்தபாலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய திருமணமான ஒருவராவார்.
விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட 6 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகை என்பன, சர்வதேச கடத்தல் பின்னணிகள் குறித்து ஆழமான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன.














