தெற்கு லண்டனின் பெட்டர்சீ (Battersea) பகுதியில் 17 வயதுடைய இளைஞனை கத்தியால் குத்திக் கொலை செய்யத சம்பவம் தொடர்பில் ஒரு சிறுமி உட்பட மூன்று சிறுவர்களைப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் அதிகாலையில் பெட்டர்சீயின் கிளைசீனா வீதியில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸாருக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது.
17 வயதுடைய ஜமால் கூம்ப்ஸ் உடலில் கடுமையான வெட்டுக் காயங்களுடன் கிடந்த நிலையில்
அவருக்கு அவசர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இக் கொலைச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்ட லண்டன் மாநகரப் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் 15 வயதுடைய ஒரு சிறுமியும், 14 மற்றும் 15 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களும் அடங்குகின்றனர்.
கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இம்மூவரும் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.














