2026 ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரில் லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த நிலையில் போர்த்துக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹூஸ்டனில் தனது பயணத்தை மிகச் சிறப்பாகத் தொடங்கினார்.
ஆறாவது கால்பந்து உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் 41 வயதான இவர், ஜோவா கான்செலோவின் ‘கிராஸ்’ (cross) பந்தைத் தொடர்ந்து, மிக அருகில் இருந்து அடித்த அற்புதமான ஷாட் மூலம் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் கணக்கைத் தொடங்கினார்.
அது ஒரு சரித்திரம் படைத்த கோல் ஆறு உலகக் கிண்ணத்தில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றார்.
மேலும், கேமரூனின் ரோஜர் மில்லாவிற்குப் பின்னர், இந்தத் தொடரின் வரலாற்றில் கோல் அடித்த இரண்டாவது வயதான வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் தடுமாறிய பிறகு, ரொனால்டோவின் முகத்தில் தெரிந்த நிம்மதி செவ்வாய் இரவு (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை) நடந்தப் போட்டியில் கண்கூடாகத் தெரிந்தது.
உத்வேகம் பெற்ற அந்த மூத்த வீரர், முதல் பாதி முடிவதற்குச் சற்று முன்பு, பந்தை நேர்த்தியாக உதைத்து கோல் மூலைக்குள் செலுத்தி தனது இரண்டாவது கோலை அடித்தார்.
இது அவரது 10 ஆவது உலகக் கிண்ண கோல் ஆகும்.
இதன் மூலம், ஒன்பது கோல்களுடன் இருக்கும் ஜாம்பவான் யூசெபியோவை முந்தி, உலகக் கிண்ணப் போட்டிகளில் போர்த்துக்கலின் முன்னணி கோல் அடித்தவர் ஆனார்.
ரொனால்டோவின் இந்த இரண்டு கோல்களும் அவரது சர்வதேசப் போட்டிகளில் அவர் அடித்த 144 மற்றும் 145-வது கோல்களாக அமைந்துள்ளன.
மெஸ்ஸியை விட 23 கோல்கள் முன்னிலையில் இருந்து அவர் இந்தச் சாதனையைத் தக்கவைத்துள்ளார்.
இதற்கிடையில், முதல் பாதியில் நுனோ மென்டெஸ் அடித்த அற்புதமான ஃப்ரீ-கிக்கின்போது புத்திசாலித்தனமாக எதிரணியினரைத் திசைதிருப்பும் வகையில் செயல்பட்டு, போர்ச்சுகலின் இரண்டாவது கோலுக்கு ரொனால்டோ உதவினார்.
இரண்டாவது பாதியின் பாதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஒரு ‘ஓன் கோல்’ (own goal) அடித்ததன் மூலம் நான்காவது கோல் கிடைத்தது; இறுதியாக 87-வது நிமிடத்தில் ரஃபா லியோ கோல் அடித்து வெற்றியை முழுமையாக்கினார்.
கொலம்பியாவுக்கு எதிராகத் தங்களின் முதல் உலகக் கோல் அடித்த உஸ்பெகிஸ்தான், அஜிஸ்ஜான் கானியேவ் தூரத்திலிருந்து அடித்த ஒரு அற்புதமான கோல் மூலம் மீண்டும் கோல் அடித்ததாக நினைத்தது.
இருப்பினும், ஃபவுல் காரணமாக அந்த கோல் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அறிமுக அணியான உஸ்பெகிஸ்தானின் உலகக் கிண்ணப் பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.
அதேநேரம், வெற்றியின் மூலம் போர்ச்சுகல், ‘கே’ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.












