சவூதி அரேபியாவின் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ‘சவூதி அராம்கோ’ நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய எண்ணெய் துறைமுகப் பகுதியான ராஸ் தனுரா (Ras Tanura) வான்பரப்பில் நேற்று (28) பறந்துகொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து நேர்ந்துள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தம் 14 பேர் பயணித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் தரையில் மோதி வெடித்ததில் அதில் பயணித்த எவரும் உயிர் பிழைக்கவில்லை எனச் சவூதி பொலிஸார் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களின் விபரங்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விபத்து நடந்த உடனே ராஸ் தனுரா பகுதிக்கு விரைந்த அவசரக்கால மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் பிரிவினர் ஹெலிகாப்டரின் இடிபாடுகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான முதன்மைக் காரணம் என்ன என்பது குறித்து தற்சமயம் வரை தெளிவான விபரங்கள் வெளியாகவில்லை.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது மோசமான வானிலை காரணமா என்பது குறித்துச் சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து கூட்டுப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள ராஸ் தனுரா பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளமை சவூதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














