இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் பதிவான வரலாறு காணாத வெப்ப அலைகளின் காரணமாக 2,700க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
காலநிலை மாற்றம் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித செயற்பாடுகளால், குறிப்பாக எரிபொருட்களை எரிப்பதன் மூலம் ஏற்பட்ட கூடுதல் வெப்பநிலையின் தாக்கத்தால் சுமார் 42 சதவீதமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்பீரியல் கல்லூரி லண்டன், பிரித்தானிய வானிலை அலுவலகம் (Met Office) மற்றும் லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பாடசாலை (LSHTM) ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளனர்.
ஆய்வின் படி, மே மாதத்தில் ஏற்பட்ட வெப்ப அலையின் போது ஒன்பது நாட்களுக்குள் சுமார் 550 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் உயிரிழந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜூன் மாதத்தில் ஏற்பட்ட கடும் வெப்பநிலை நிலவிய 11 நாட்களுக்குள் சுமார் 2,200 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் கொண்டவர்கள் அதிகளவில் வெப்பத்தின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உலகளாவிய காலநிலை மாற்றத்தின் விளைவாக எதிர்காலத்தில் இதுபோன்ற கடுமையான வெப்ப அலைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும், அதனை எதிர்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.














