தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் திங்கட்கிழமை (13) அதிகாலையில் அரசுப் பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 42 பேர் காயமடைந்ததாகவும், 5 பேர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரை பொலிஸாரின் தகவலின்படி, கொட்டாம்பட்டிக்கு அருகிலுள்ள வண்டினகரம் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
தனியார் பேருந்து ஓட்டுநர் வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படும் நிலையில், அப்பேருந்து சாலைத் தடுப்பைத் தாண்டி எதிர்ச் சாலையில் புகுந்து, மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த மோதலால் தனியார் பேருந்தின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது; அதேவேளையில், அரசுப் பேருந்து கவிழ்ந்தது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், கொட்டாம்பட்டி காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரு பேருந்துகளிலும் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணிகளைத் தொடங்கினர்.
விபத்தில் நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தைகள் உட்பட மொத்தம் 42 பேர் பலத்த காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸ் அறிக்கை மேலும் தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.















