வளைகுடா நாடான கட்டாரை உலகளாவிய பொருளாதார மற்றும் இராஜதந்திர சக்தியாக மாற்றிய பெருமைக்குரிய முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் (Sheikh Hamad bin Khalifa Al Thani) மறைவைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஷேக் ஹமதின் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமைத்துவமும் கட்டாருக்கான அவரது சேவையும் நினைவுகூரப்படும்.
இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில், மேன்மை தங்கிய ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, அரச குடும்பத்தினர் மற்றும் கட்டார் மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும் – என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய செல்வாக்கு மிக்க, அதீத செல்வம் கொண்ட நவீன நாடாக கட்டார் அடைந்த வியக்கத்தக்க மாற்றத்தின் சிற்பியான முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, தனது 74 ஆவது வயதில் காலமானதைத் தொடர்ந்து தோஹாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
ஷேக் ஹமத்தின் மறைவு குறித்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வெளியானது.
அதனைத் தொடர்ந்து, தலைநகரில் உள்ள இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹாப் மசூதியில், சூரிய அஸ்தமனத்தின் போது நடைபெறும் மாலை நேரத் தொழுகைக்குப் பின்னர் அவரது உடலுக்கான எளிமையான இறுதிச் சடங்கு நடைபெற்றது.
1995 முதல் 2013 வரை ஷேக் ஹமத் ஆட்சியில் இருந்த காலத்தில், நாட்டின் மிகப்பெரிய எரிவாயு வளங்களை மேம்படுத்துவதில் அவர் செலுத்திய கவனத்தின் காரணமாக, கட்டாரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்தது.
2006-ஆம் ஆண்டிற்குள், அந்தச் சிறிய நாடு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) உலகிலேயே அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியமையும் குறிப்பிடத்தக்கது.













