கடந்த ஜூன் மாத இறுதியில் ஐரோப்பியக் கண்டத்தின் மேற்குப் பகுதியை நிலைகுலையச் செய்த கடுமையான வெப்ப அலையின் போது, வழக்கத்தை விட 10,000-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் ஆதரவோடு இயங்கும் ‘EuroMOMO’ என்ற மரணக் கண்காணிப்பு அமைப்பு இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது.
வெப்ப அலையினால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், அதாவது 9,000-க்கும் அதிகமானோர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் என அந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதுகுறித்து ‘EuroMOMO’ அமைப்பை நடத்தும் டென்மார்க்கின் ஸ்டேட்டன்ஸ் சீரம் நிறுவனத்தின் முதன்மை மருத்துவர் லாஸ் வெஸ்டர்கார்ட் (Lasse Vestergaard) ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
மனிதர்களின் செயல்பாடுகளால் உலகளவில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றமே இத்தகைய தீவிர வெப்ப அலைகளுக்குக் காரணம் என விஞ்ஞானிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புவி வெப்பமயமாதல் காரணமாகவே இவ்வாறான வெப்ப அலைகள் அடிக்கடி மற்றும் அதிக தீவிரத்துடன் ஏற்படுவதாகவும், மனிதர்களின் தலையீடு இல்லாவிட்டால் ஜூன் மாத இறுதியில் நிலவிய இவ்வளவு கடுமையான வெப்ப அலை உருவாவது “சாத்தியமற்ற ஒன்று” என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் ஜூன் 22 முதல் 28 வரையிலான வாரத்தில் வெப்ப அலையின் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது.
தற்போது வெளியாகியுள்ள இந்தத் தரவுகள், 27 ஐரோப்பிய நாடுகளின் தேசிய மரணப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் திரட்டப்பட்டவையாகும்.
இதில் வெப்பத்தினால் நேரடியாக ஏற்பட்ட மரணங்கள் மட்டுமன்றி, அந்த வாரத்தில் கடுமையான வெப்பச் சூழல் காரணமாகப் பிற உடல்நலக் குறைபாடுகள் தீவிரமடைந்து ஏற்பட்ட அனைத்து வகையான மரணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













