வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை (13) கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன.
இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக உடல்களை அந்தந்த சொந்த மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
விமான நிலைய அதிகாரிகள் உடல்களைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.
இறுதிச் சடங்குகளுக்காக சடலங்கள் பாதிக்கப்பட்டவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
முன்னதாக, இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த தம்பதியினரின் உடல்கள் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தன.
உடல்களை ஒப்படைக்கும் பணிகளை மேற்பார்வையிடவும், துயருற்ற குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ஆதரவு அளிக்கவும் காங்கிரஸ் எம்.பி. கோடிகுன்னில் சுரேஷ் விமான நிலையத்தில் உடனிருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ், உடல்களைக் கொட்டாரக்கராவில் உள்ள அவர்களது சொந்த கிராமத்திற்குக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு புதன்கிழமையன்று இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான சுற்றுலாப் படகின் பாதுகாப்புத் தரநிலைகள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துவது தொடர்பாக வியட்நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்திய அந்த காங்கிரஸ் எம்.பி., உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் (VN979) மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, இன்று அதிகாலை மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கின.
அங்கிருந்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து உடல்கள் அந்தந்த மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
மற்ற உயிரிழந்தவர்களின் உடல்களும் தெலுங்கானாவின் ஹைதராபாத் மற்றும் தமிழ்நாட்டின் சென்னைக்கு வந்து சேர்ந்தன.
வியட்நாமின் ஃபு குவோக் (Phu Quoc) தீவுக்கு அப்பால் உள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவு அருகே, 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் நான்கு வியட்நாமியப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 36 பேருடன் சென்ற சுற்றுலா வேகப் படகு ஒன்று கவிழ்ந்ததில் இந்தத் துயரச் சம்பவம் ஜூலை 11 அன்று நிகழ்ந்தது.
வியட்நாம் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஓஷன் பேர்ல் ஐலேண்ட் கம்பெனியால் இயக்கப்படும் அந்தக் கப்பல், ஹான் மே ரட் சிறு தீவிலிருந்து ஆன் தோய் துறைமுகத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது, மோசமான வானிலையை எதிர்கொண்டு கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்த அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.
அருகில் இருந்த சுற்றுலாப் படகுகளும் மீட்புக் குழுக்களும் விரைந்து செயல்பட்டு, அனைத்துப் பயணிகளையும் கரைக்குக் கொண்டு வந்தனர்.
கப்பலில் இருந்த 36 பேரில், 21 பேர் உயிர் தப்பினர், அதேசமயம் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும், கேரளாவைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.
உயிர் தப்பிய ஒருவர் வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.












