இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கான இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் (Double Taxation Avoidance Agreement – DTAA) இந்தியா திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
வரி ஒப்பந்தங்களின் தவறான பயன்பாட்டைத் தடுத்து, அரச வருவாய் கசிவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான திருத்தப்பட்ட நெறிமுறை (Protocol) கடந்த ஜூன் 19 ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளதுடன், அது தற்போது இந்திய நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகள், 2027 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இந்தியாவில் பெறப்படும் வருமானங்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் ‘முதன்மை நோக்கம் சோதனை’ (Principal Purpose Test – PPT) என்ற புதிய ஏற்பாடு சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு வரி ஏய்ப்பு தடுப்புக் கருவியாகும். ஒரு வர்த்தகப் பரிவர்த்தனை அல்லது ஏற்பாட்டின் முக்கிய நோக்கமே, வரிச் சலுகையைப் பெறுவதாக இருந்தால், அந்தச் சலுகையை மறுக்க வரி அதிகாரிகளுக்கு இந்தச் சோதனை அதிகாரம் அளிக்கிறது. ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கத்திற்கு உட்பட்டு பரிவர்த்தனைகள் நடந்தால் மட்டுமே சலுகைகள் வழங்கப்படும்.
இது குறித்து கிராண்ட் தார்ன்டன் பாரத் (Grant Thornton Bharat) நிறுவனத்தின் பங்குதாரர் ரிச்சா சாவ்னி கூறுகையில், “இந்த மாற்றங்கள், ஒப்பந்தத்தின் முன்னுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி, வரி தவிர்ப்பு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும். இனி, வரிச் சலுகைகள் என்பது உண்மையான வணிக நோக்கம் மற்றும் வணிகத்தன்மை கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. எனவே, வரி செலுத்துபவர்கள் தங்கள் வணிகக் கட்டமைப்பின் உண்மையான வணிக நோக்கத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
நங்கியா அண்ட் கோ எல்எல்பி (Nangia & Co LLP) நிறுவனத்தின் மூத்த பங்குதாரர் அமித் அகர்வால் கூறுகையில், “இந்திய வரி அதிகாரிகள், வரிச் சுமையைக் குறைப்பதற்காக மட்டும் வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குச் சலுகைகளை மறுக்க இந்த PPT வகை உதவுகிறது. முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, இது ஒரு தெளிவான சட்ட முறையிலிருந்து, வரிச் சலுகைகளைப் பெறுவதில் அதிக நுணுக்கமான மற்றும் சுயாதீனமான (Subjectivity) சோதனைகளை எதிர்கொள்ளும் சூழலை உருவாக்கியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
பேஸ் எரோஷன் அண்ட் பிராஃபிட் ஷிஃப்டிங் (BEPS) எனப்படும் வரித் திட்டமிடல் முறைகேடுகளைத் தடுக்க, மல்டிலேட்டரல் கன்வென்ஷன் (MLI) இந்தியாவுக்கு அக்டோபர் 1, 2019 முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே சீனா, ஈரான், ஹாங்காங் போன்ற நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் இந்த PPT முறை அமலில் உள்ளது. மேலும், ஜனவரி 2025-ல் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஏப்ரல் 2017-க்கு முன்பு மொரிஷியஸ், சைப்ரஸ் மற்றும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்களால் வாங்கப்பட்ட பங்குகள் இந்த PPT-யின் வரம்புக்குள் வராது என்பது குறிப்பிடத்தக்கது.













