அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி வேறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும், உளவு இயந்திரம் ஒன்றும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் பயன்படுத்தி மணல் அகழ்வு இடம் பெறுவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று (19) இரவு திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, திருகோணமலை மாவட்டத்தில் வழங்கப்பட்ட மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி கல்லாறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு டிப்பர்களும் மற்றும் ஒரு உளவு இயந்திரத்துடன் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கைதான சாரதிகள் 5 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தடையப் பொருட்கள் புதன் கிழமை அன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.











