கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் சற்றுமுன்னர் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையால், ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 04.45 க்கு ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த 1164 இலக்க ரயில், தாமதமாகி மேடையை வந்தடைய முற்பட்ட போது மாலை 04.35 அளவில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக ரயிலின் ஒரு பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் கடந்த 7 ஆம் திகதியும் இதே ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தடம்புரள்வு காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகள் முழுமையாகத் தடைப்பட்டுள்ளதுடன், ரயிலை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்காக ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலைமையினால் மாலை வேளையில் பயணிக்கும் ஏனைய சில அலுவலக ரயில்களும் சற்று தாமதமடையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












