லெகஸி (Legacy) சம்பவம் தொடர்பான வழக்கில் உயிரிழந்த 89 வயதான மார்க் ஹோதம் என்பவரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழங்கிய பாதிப்பு அறிக்கைகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
2023 செப்டம்பர் 10ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்த மார்க் ஹோதம் தொடர்பாக, அவரது மருமகன் நைஜல் மற்றும் நீண்டகால பராமரிப்பாளர் மற்றும் நெருங்கிய நண்பரான டெபி கீட்டிங் ஆகியோர் நீதிமன்றத்தில் தங்களது வேதனைகளை வெளிப்படுத்தினர்.
முதலில் உரையாற்றிய நைஜல், லெகஸி தொடர்பான விசாரணை குறித்து ஊடகங்கள் மூலமே அறிந்ததாகவும், அந்த இடத்தில் தனது மாமா இருக்க முடியாது என தன்னைத் தானே சமாதானப்படுத்த முயன்றதாகவும் தெரிவித்தார்.
“பொலிஸார் கண்டெடுக்கப்பட்ட உடல்களில் மாமா மார்க்கும் ஒருவர் என தெரிவித்தபோது, எனது உலகமே சிதைந்துவிட்டது” என அவர் கூறினார்.
மேலும், இந்த செய்தியை அறிந்தபோது தனது சகோதரி கடும் அதிர்ச்சியடைந்ததாகவும் நைஜல் தெரிவித்தார்.
போர்காலத்தில் சிறுவனாக இருந்தபோது வெளியேற்றப்பட்ட நிலையில் மார்க் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவும், வாழ்க்கையின் இறுதியிலும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அவர் இரக்கத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் உடல் பையில் அழுகும் நிலையில் விடப்பட்டார். இதற்கு காரணமானவரை நான் வெறுக்கிறேன்” என நைஜல் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

















