நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகப் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிப்பதாகவும் பீகார் அரசு திங்கள்கிழமை (27) அறிவித்தது.
இது தொடர்பில் பீகார் மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநிலம் முழுவதும் ஜூலை 26 ஆம் திகதி மாலை 6 மணிக்குள் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற தனிநபர்கள் மீது அரசு எந்தவிதமான பாதகமான சட்ட நடவடிக்கையோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ எடுக்காது.
மேலும், குறிப்பிட்ட அந்தப் போராட்டங்களில் பங்கேற்றதற்காகத் தனிநபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகள் (FIR), குற்றவியல் முறைப்பாடுகளை திரும்பப் பெறுவதற்கான சட்ட நடைமுறைகளும் உடனடியாகத் தொடங்கப்படும் – என்று தெரிவித்துள்ளது.
2026 ஜூலை 26 அன்று மாலை 6 மணிக்கு முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் உள்துறைத் துறையின் சிறப்புச் செயலாளர் சத்ரானில் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 26 அன்று மாலை 6 மணிக்கு முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்குகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எதிர்காலத்திலும் நேரடி அல்லது மறைமுக நடவடிக்கையாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜூலை 20 அன்று ஜந்தர் மந்தர் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க டெல்லி காவல்துறை பலப்பிரயோகம் செய்ததைத் தொடர்ந்து, பீகாரின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன.
ஜூலை 25 அன்று நடைபெற்ற ‘பீகார் பந்த்’ தொடர்பான பரவலான வன்முறை மற்றும் போராட்டங்களை அடுத்து, பீகார் காவல்துறை 355 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
ஜூலை 25ஆம் திகதி நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் நடத்திய கல் வீச்சில் இரண்டு பொலிஸ் கண்காணிப்பாளர்கள் (SP) மற்றும் இரண்டு உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்கள் (DSP) உட்பட 91 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
ஜூலை 25 அன்று பந்த் ஆதரவாளர்கள் இந்தப் போராட்டங்களின்போது, பாட்னாவின் காந்தி மைதான காவல் நிலைய அதிகாரி உட்படப் பல காவல் நிலையப் பொறுப்பு அதிகாரிகள் தலையில் காயமடைந்தனர்.
இந்தப் போராட்டங்கள் பல மாவட்டங்களில் கடுமையான சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கு வழிவகுத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வன்முறையில் 14 அரசு வாகனங்கள் சேதமடைந்தன; ஒரு வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
இந்தக் கலவரத்தின்போது 13 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
திங்களன்று பீகார் காவல் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 694 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.
விசாரணைக்குப் பின்னர், 339 சிறார்களும் மாணவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
அதேவேளையில், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 355 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.














