வெளிநாட்டு மருத்துவர்கள் இங்கிலாந்து மருத்துவமனைகளில் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள அனுமதித்த ஒரு நீண்டகாலத் திட்டத்தை தேசிய சுகாதார சேவை இரத்து செய்துள்ளது.
ஆண்டுதோறும் 400 முதல் 500 வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு பிரிட்டனில் பணி நியமனம் வழங்கப்பட்டு வந்த மருத்துவப் பயிற்சித் திட்டத்தை இரத்து செய்யும் தேசிய சுகாதார சேவையின் தீர்மானத்தை சிரேஷ்ட மருத்துவர்கள் விமர்சித்துள்ளனர்.
இது பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த மருத்துவப் பட்டதாரிகள், சுகாதார சேவையில் இரண்டு ஆண்டுகள் வரை பணியாற்றித் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வழிவகுத்தது.
இதன்மூலம் மருத்துவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பும்போது சிறந்த மருத்துவர்களாக உருவானார்கள்.
இந்தத் திட்டத்துக்கு நிதியளிக்க தேசிய சுகாதார சேவை இங்கிலாந்துக்கு ஆண்டுதோறும் £176,000 செலவானதுடன், 2011 இல் இது தொடங்கப்பட்டதிலிருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மருத்துவர்களுக்கு பிரிட்டனில் பணிபுரிய வாய்ப்பையும் வழங்கியுள்ளது.
தேசிய சுகாதார சேவை (NHS) அமைப்பு, அதன் மொத்த மருத்துவர்களில் ஐந்தில் இரண்டு பங்காக இருக்கும் சர்வதேச பட்டதாரிகளைப் பெருமளவில் சார்ந்துள்ளது. இது, ஏற்கனவே நிலவிவரும் கடுமையான மருத்துவர் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கும் என அஞ்சப்படுகிறது .
















