அம்பாறை மாவட்டம் பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை ஒன்று அதை விரட்ட முயன்ற கிராம மக்களைத் திரும்பத் துரத்தியதால் பகுதியில் பெரும் பரப்பரப்பும் அச்சமும் நிலவியது.
கிராமத்திற்குள் புகுந்து முழுமையாகச் சுற்றித் திரிந்த காட்டு யானையை ஊரார் ஒன்றுதிரண்டு வெளியேற்ற முயன்றபோது, யானை கோபமடைந்து துரத்த முற்பட்டதால் பொதுமக்கள் நாலாப்பக்கமும் தெறித்து ஓடினர். எனினும் அதிர்ஷ்டவசமாகவும் இறைவனின் அருளாலும் பெரிய அளவிலான உயிர்ச்சேதங்களோ உடைமைச் சேதங்களோ இன்றி யானை பாதுகாப்பாக மீண்டும் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளது.
கிராமத்துப் பகுதி இளைஞர்கள் துணிச்சலுடனும் மிகுந்த பொறுப்புடனும் செயற்பட்டு, யானைக்கு எவ்வித ஆபத்தும் இன்றி அதனைப் பாதுகாப்பான முறையில் காட்டுப் பகுதிக்குள் அனுப்புவதற்கு உதவினர்.
இது குறித்து அப்பகுதி முக்கியஸ்தர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:
‘எமது கிராமத்தை அண்டிய பகுதிகளில் அதிகளவிலான யானைக்கூட்டங்கள் உலாவுவது அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் குறிப்பாக இரவு நேரங்களில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரின் உயிரும் பெறுமதியானது என்பதால் உயிர் அல்லது உடைமைச் சேதங்கள் ஏற்படாத வகையில் மிகவும் அவதானத்துடன் பொறுப்பாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிட்டார்.

















