ஸ்டாக்ஹோமைத் தளமாகக் கொண்ட உலகளாவிய விளையாட்டு உரிமைக் குழுவான “Anchor Sports AB”, நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) மிகவும் வெற்றிகரமான அணியான ஜப்னா கிங்ஸை கையகப்படுத்தியதை அடுத்து, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஷகீர் கான் அதன் இணை உரிமையாளராகியுள்ளார்.
கையகப்படுத்தலைத் தொடர்ந்து, இந்த உரிமையகம் அதிகாரப்பூர்வமாக ‘Anchor Jaffna Kings‘ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது அதன் புதிய உரிமையின் கீழ் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
உலகளாவிய உரிமையக கிரிக்கெட்டில் இந்தக் குழுமம் தனது இருப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதால், ஷகீர், ஆங்கர் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் நாகேந்திர சித்தௌதமுடன் இணை உரிமையாளராக இணைகிறார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் லங்கா பிரீமியர் லீக்கில் மற்றொரு முக்கிய கிரிக்கெட் ஆளுமை இணைந்துள்ளார்.
இப்போட்டியில் ஏற்கனவே ஒரு முன்மாதிரி அணியாகத் திகழும் ஒரு அணிக்கு, ஷகீர் தனது பல தசாப்த கால சர்வதேச அனுபவத்தை வழங்கவுள்ளார்.
இதுவரை நடந்து முடிந்துள்ள ஐந்து சீசன்களில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜப்னா அணி, இந்த ஆண்டிலும் வெற்றி வாய்ப்புள்ள முன்னணி அணிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
பானுக ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் விளையாடி வரும் இவ்வணி, ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கையகப்படுத்தல், ஆங்கர் ஸ்போர்ட்ஸின் சர்வதேசப் பிரிவை மேலும் விரிவுபடுத்துகிறது.
இதில் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கில் உள்ள ஆன்ட்வெர்ப் ஆங்கர்ஸ் அணியும், கனடாவின் சூப்பர் 60 லீக்கில் போட்டியிடும் வான்கூவர் ஆங்கர்ஸ் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளும் அடங்கும்.
ஒரு வீரருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரரும், ஜப்னா கிங்ஸ் அணியின் முன்னாள் இணை உரிமையாளருமான மன்ஜோத் கல்ரா, இலங்கையின் விளையாட்டுத் துறை ஊழல் தடுப்புப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
















