தொழில்முறை மல்யுத்த வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ப்ராக் லெஸ்னர் (Brock Lesnar), தனது மல்யுத்த வாழ்க்கையிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் WWE மற்றும் UFC ஹெவிவெயிட் சாம்பியனான அவர், The Pat McAfee Show நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்மூலம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவரது மல்யுத்த வாழ்க்கை நிறைவுக்கு வந்துள்ளது.
மினசோட்டா மாநிலத்தில் நடைபெற்ற SummerSlam போட்டியின் முதல் நாளில், Hell in a Cell போட்டியில் ஒபா பெமி (Oba Femi)யிடம் தோல்வியடைந்ததே லெஸ்னரின் கடைசி போட்டியாக அமைந்துள்ளது.
போட்டிக்குப் பின்னர் உணர்வுபூர்வமான தருணமொன்றை உருவாக்கிய லெஸ்னர், தன்னை “கடந்த காலம்” என்றும், ஒபா பெமியை “எதிர்காலம்” என்றும் குறிப்பிட்டு, ரசிகர்கள் முன்னிலையில் அவரது கையை உயர்த்திப் பிடித்தார்.


இந்தச் செயல், WWE-யின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் மீது தனக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
ப்ராக் லெஸ்னர் 2002ஆம் ஆண்டு WWE-யின் முக்கியப் பிரிவில் அறிமுகமானார். அறிமுகமான குறுகிய காலத்திலேயே, தலைமுறைக்கு ஒருமுறை உருவாகும் திறமைமிக்க வீரர் என தன்னை நிரூபித்த அவர், அந்த நேரத்தில் WWE வரலாற்றில் மிக இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
தனது நீண்டகால WWE பயணத்தில், லெஸ்னர் பலமுறை WWE சாம்பியன்ஷிப் மற்றும் யுனிவர்சல் சாம்பியன்ஷிப் பட்டங்களை கைப்பற்றினார்.
மல்யுத்த அரங்கத்தைத் தாண்டியும் ப்ராக் லெஸ்னர் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
அவர் UFC ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி, தொழில்முறை மல்யுத்தம் மற்றும் கலப்பு தற்காப்புக் கலைகள் (MMA) ஆகிய இரு துறைகளிலும் உச்சத்தைத் தொட்ட மிகச் சில வீரர்களில் ஒருவராக உயர்ந்தார்.
இந்த நிலையில், ப்ராக் லெஸ்னர், மல்யுத்த உலகம் இதுவரை கண்ட மிகவும் ஆதிக்கம் செலுத்திய, அச்சுறுத்தும் மற்றும் சாதனைகள் நிறைந்த வீரர்களில் ஒருவராக தனது பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்.














