கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அம்பலாந்தோட்டையிலுள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமொன்றில் நாளை (14) நடைபெறவிருந்த இயற்பியல் (Physics) பாடத்தின் முதலாவது வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் இன்றே கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் இடம்பெறவிருந்த இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் கொள்கலனைத் திறந்து பரிசீலித்த போதே, அதற்குள் நாளை நடைபெறவிருந்த இயற்பியல் முதலாம் தாள் அடங்கிய 06 பொதிகளும் தவறுதலாக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துக் கல்வி அமைச்சு உடனடியாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இருப்பினும், குறித்த வினாத்தாள்கள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட பொதிகள் எதுவுமே பிரிக்கப்படவில்லை என்றும், வினாத்தாள்களின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெளிவுபடுத்தியுள்ளார்.







