அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவிற்குச் சேவை அளிக்கும் இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தோனேசியாவின் எட்டு விமான நிலையங்கள் திங்கட்கிழமை (07) அதிகாலையில் தொடர்ந்து மூடப்பட்டிருந்ததாகப் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கிரகடாவ் எரிமலை வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் செயல்பாட்டிற்கான அறிகுறிகளைக் காட்டி வந்தது.
அதிலிருந்து வெளியேறிய சாம்பல் மற்றும் புகை மண்டலம் ஜகார்த்தாவையும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளையும் சூழ்ந்து கொண்டது.
இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையங்கள் மூடப்பட்டன.
விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் 1,70,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனக் கிரகடாவ் எரிமலையின் மிக அண்மைய வெடிப்பு உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 8:23 மணிக்கு நிகழ்ந்ததாக, எரிமலை கண்காணிப்பு அமைப்பின் இணையதளம் தெரிவித்தது.
இந்த வெடிப்புகளால், எரிமலையின் ஜாவா பக்கத்தில் 6,000 மீட்டர் உயரம் வரையிலும், சுமாத்ரா பக்கத்திலும் ஜாவாவில் உள்ள பான்டென் மாகாணத்தின் சில பகுதிகளிலும் 15,000 மீட்டர் உயரம் வரையிலும் சாம்பல் எட்டியுள்ளதாக வானிலை ஆய்வு நிறுவனமான BMKG தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, சாம்பல் காரணமாக மக்கள் வெளியில் பயணம் செய்யும்போது முகக்கவசம் அணியுமாறு பேரிடர் ஆய்வு நிறுவனம் கேட்டுக்கொண்டது.
ஜகார்த்தா மற்றும் லம்பங்கில், மாணவர்களுக்கான சுகாதார அபாயங்களைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகள் தொலைநிலைக் கற்றலைப் பயன்படுத்தும் என்று அரசு செய்தி நிறுவனமான அன்டாரா தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா, பசிபிக் “நெருப்பு வளையத்தில்” அமைந்துள்ளது, அங்கு நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் அடிக்கடி நிகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.















