போதைப்பொருள் அல்லது மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கும் விசேட நடவடிக்கைகளை இலங்கைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேனதீர இதனைத் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை தொடர்பாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தினசரி இடம்பெறும் உயிரிழப்பு மற்றும் கடுமையான காயங்களுக்கு காரணமான சாலை விபத்துகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், போதைப்பொருள் பாவனை, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், அபாயகரமான மற்றும் பொறுப்பற்ற முறையிலான சாரதி நடவடிக்கைகள், அதிகளவான சோர்வு ஆகியவை முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, டிப்பர் வாகனங்கள், சரக்கு லொறிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணிகள் பேருந்துகளின் சாரதிகள் மீது விசேட கவனம் செலுத்தி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், போதைப்பொருளின் தாக்கத்தில் பேருந்துகளை இயக்கியதாக கண்டறியப்பட்ட பல பேருந்து சாரதிகளும் நடத்துநர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சேனதீர தெரிவித்தார்.
அதேவேளை, அதிவேகமாக பயணிக்கும், போட்டி ஓட்டத்தில் ஈடுபடும், அபாயகரமான முறையில் வாகனம் செலுத்தும் அல்லது போதைப்பொருளின் தாக்கத்தில் வாகனங்களை இயக்கும் பேருந்து சாரதிகள் குறித்து பொதுமக்கள் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகனத்தின் இலக்கத் தகடு தெளிவாகக் காணப்படும் காணொளி ஆதாரங்களை 070 475 5600 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், சட்டத்தை மீறியதாக உறுதிப்படுத்தப்படும் நபர்கள் எந்த நிலையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.














