சவுத்தாம்ப்டன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்ததது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஹாரி ப்ரூக் 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் அபாரமாக 114 ஓட்டங்களை குவித்தார்.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
டி:20 போட்டிகளில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி தொடர்ந்து 13 ஆவது வெற்றியைப் பதிவு செய்த சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது.
போட்டியின் முதலில் துடுப்பாட்டம் செய்த இங்கிலாந்து அணி ப்ரூக்கின் ஆட்டமிழக்காத 114 ஓட்ட உதவியுடன் இங்கிலாந்து 254/4 என்ற பிரம்மாண்டமான ஓட்ட எண்ணிக்கையை எட்டியது.
மறுபுறம், இலங்கை அணியால் இலக்கை எட்டும் முயற்சியில் ஒருபோதும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தில் ப்ரூக் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 128 ஓட்டங்கள் கொண்ட சிறப்பான கூட்டணியை அமைத்தனர்.
பவர்-பிளே ஓவர்களில் இங்கிலாந்து அணி 90/1 என்ற நிலையை எட்டியது; பட்லர் 29 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்து, இறுதியில் 80 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஆட்டத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ப்ரூக், 42 பந்துகளில் சதம் அடித்ததுடன், 49 பந்துகளில் 114 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
அவரது இந்த இன்னிங்ஸில் 10 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 232.65 ஆக இருந்தது.
ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் வில் ஜாக்ஸ் 12 பந்துகளில் 21 ஓட்டங்களை வேகமாகச் சேர்த்தார்.

இலங்கையின் ரன்-சேஸிங் ஆரம்பத்திலேயே தடுமாறியது; பவர்பிளே கட்டத்தில் அவர்கள் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தனர்.
தசுன் ஷனக 14 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்துச் சற்றுப் போராடினார், அதேவேளையில் துனித் வெல்லாலகே 21 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்து அணியின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார்.
ஈஷான் மலிங்க 5 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்கள் எடுத்தது தோல்வி இடைவெளியைச் சற்று குறைத்தார்.
இறுதியில் இலங்கை அணி 19 ஓவர்களில் 135 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சோனி பேக்கர் இங்கிலாந்தின் சிறந்த பந்துவீச்சாளராகத் திகழ்ந்து, நான்கு ஓவர்களில் 12 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதே நேரத்தில், ஜேமி ஓவர்டன் மற்றும் லியாம் டாசன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பேக்கர் தனது சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில், வேகமான மற்றும் அனல் பறக்கும் பந்துவீச்சின் மூலம் ஆட்டத்திற்கு ஒரு தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார், மற்றவர்களும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தனர்.
தனது வாழ்நாள் சிறந்த டி20ஐ ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்த பிறகு, புரூக் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இங்கிலாந்தின் அபாரமான வெற்றிக்குப் பிறகு, அந்த அணியின் வெள்ளைப்பந்து வரிசையில் கெவின் பீட்டர்சனின் தாக்கம் ஏற்கெனவே வெளிப்படத் தொடங்கியுள்ளது.
பீட்டர்சன் இந்த மாதத் தொடக்கத்தில் இங்கிலாந்து அணியில் சிறப்பு ஆலோசகராக இணைந்தார்.
தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2027 ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் வரை அவர் இந்தப் பொறுப்பை வகிப்பார்.














