ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலையும், தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி தஜகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
அத்தோடு, அஷ்ரப் கானி ஆட்சியை ஒப்படைத்ததைத் தொடர்ந்து இடைக்கால அரசையும் நிறுவியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டதையடுத்து, அரசுப் படைகள் மீதான தாக்குதலை தாலிபான்கள் தீவிரப்படுத்தினர்.
ஒரே வாரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதியைக் கைப்பற்றியிருந்த நிலையில், நேற்று தலைநகர் காபூலைச் சுற்றி வளைத்தனர்.
இந்த நிலையில், அரசுப் படையினர் எந்த எதிர்ப்பும் இன்றி சரணடைந்ததையடுத்து, தாலிபான்கள் புல் இ சர்கி என்ற இடத்தில் இருந்த சிறைச்சாலையைக் கைப்பற்றி அதிலிருந்த ஆயிரக்கணக்கான கைதிகளை விடுதலை செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற தாலிபான்களின் பிரதிநிதிகள், மோதலின்றி ஆட்சி மாற்றம் ஏற்பட ஜனாதிபதி அஷ்ரப் கானியிடம் யோசனை முன்வைத்தனர்.
இந்த விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்ஸாய் மற்றும் தேசிய நல்லிணக்க சபையின் தலைவர் அப்துல்லா அப்துல்லா தலைமையிலான தலிபான்களுக்கும் அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே ஜனாதிபதி மாளிகையில் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பதவி விலகிய அஷ்ரப் கானி தஜகிஸ்தானில் உள்ள தாஷ்கண்ட் நகருக்கு புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.