கொழும்பு, நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தில் மறைத்து ஆயுதத்தை கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலக உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு ஆயுதம் கொண்டு வருவதற்கு சந்தேக நபர் சட்டத்தரணி போல் மாறுவேடமிட்டு வந்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்றத்தின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தெரிவித்தார்.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் நீதிமன்ற பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குச் சென்ற பிரதி பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகலவை ஊடகவியலாளர்கள் சூழ்ந்து கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நீதிமன்ற வளாகத்தினுள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை மற்றும் அதன் விளைவாக பொது பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த பிரதி அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.