உக்ரேனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவியைக் கொடுத்தால், தனது ஜனாதிபதிப் பதவியைத் துறக்கத் தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரேன்-ரஷ்யா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். மேலும் ‘உக்ரரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சர்வதிகாரிபோல் செயற்படுகிறார் எனவும், இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார் எனவும் ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த போதே வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது உக்ரேனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் எனவும், உக்ரேனுக்கு நோட்டோ உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் எனவும், ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பிற்கு எதிராக உக்ரேனுக்கு ட்ரம்ப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மிகவும் தேவை. உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையே டிரம்ப் மத்தியஸ்தராக இருக்க வேண்டும் எனவும் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நோட்டோ நாடுகளுக்கு நேட்டோ படைகள் பாதுகாப்பு தரும். குறிப்பாக நேட்டோ உறுப்பு நாட்டை யாராவது தாக்கினால், பதிலாக அனைத்து நேட்டோ நாடுகளும் ஆதரவாக வரும். இது தனக்கான பாதுகாப்பைத் தரும் என உக்ரேன் கருதுகிறது. நோட்டோவில் உக்ரேன் உறுப்பினராக இணைய ரஷ்யா மறுப்பு தெரிவித்ததே போருக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.