கட்டுநாயக்க, ஆடியம்பலம் பகுதியில் நேற்றைய (22) தினம் ஒரு தொழிலதிபர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி தோல்வியடைந்ததை, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘ஹீனட்டியன நீல்’ என்ற நபர் திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விசாரணைகளில், அந்த தொழிலதிபர் கடந்த காலங்களில் பாதாள உலக நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.
தப்பியோடிய துப்பாக்கிதாரி, நாட்டில் நடந்த பல கொலைகள் தொடர்பாக தேடப்படும் நபராக சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தொழிலதிபர், வாகனப் பதிவுப் புத்தகங்களுக்கு ஈடாக பணம் கடனாக வழங்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அவர், துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், பணம் தேவைப்படுவதாகத் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் தனது வீட்டிற்குள் வரவேற்கப்பட்டதாகவும் கூறினார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட தொழிலதிபர்,
அவர்கள் (துப்பாக்கி தாரிகள்) வீட்டுக்கு உள்ளே நுழைந்ததும், நான் பிரதான கேட்டை மூடிவிட்டு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன்.
வாகன பதிவு புத்தகத்தை நான் கேட்டபோது, அவர்கள் ஒருவரையொருவர் சந்தேகப்படும்படி பார்த்தார்கள்.
அந்த நேரத்தில், ஒரு துப்பாக்கிதாரி என்னைத் தாக்க முயன்றார், ஆனால் நான் அவரைத் தடுக்க முடிந்தது.
அந்த நேரத்தில் மற்றொரு துப்பாக்கிதாரி ஒரு துப்பாக்கியை எடுத்தார்.
ஆனால் நான் அவர்கள் இருவரையும் எதிர்த்துப் போராடியபோது, அவர்கள் ஓடிப்போய் தப்பிக்க முயன்றனர்.
கேட் பூட்டப்பட்டிருந்ததால், அவர்கள் சுவரில் ஏறி தப்பிக்க வேண்டியிருந்தது.
அப்போது ஒரு சந்தேக நபர் விழுந்து கால் முறிந்தது.
பிரதேச வாசிகள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மற்றொரு சந்தேக நபர் தப்பி ஓடிவிட்டார் – என்றார்.
துப்பாக்கிச் சூடு தோல்வியில் ஈடுபட்ட ஒரு துப்பாக்கிதாரியைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதே நேரத்தில் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்ய விசாரணைகள் நடந்து வருகின்றன.