லண்டனில் பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை தாக்கிய நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதேவேளை அமெரிக்கா, பிரான்சில் ,பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை ஒருவர் தாக்கி உள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனவும் இச ்சம்பவத்தின் போது அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை ஒருவர் சேதப்படுத்துவதாக அதிகாரிகள் பொலிஸாருக்கு அவசர தகவல் அனுப்பினர். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் அங்கித் லவ் என்னும் 41 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை கைது செய்தனர்.
பின்னர், அவரை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச் சம்பவத்தை அடுத்து தூதரக அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.