மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் காலை (06) ஆரம்பமான உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
எவ்வித வன்முறைகளும் இன்றி மன்னார் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் இடம் பெற்றிருப்பதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் இன்று மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் 88 உறுப்பினர்களை தெரிவு செய்ய 91,373 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் இன்று மாலை வரை 64 ஆயிரத்து 904 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் மாவட்டத்தின் முழுமையான வாக்குப்பதிவு 70.15% காணப்படுவதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார்.
மன்னார் நகர சபைக்கு 10,975 வாக்குகளும் ,மன்னார் பிரதேச சபைக்கு 16,939 வாக்குகளும், நானாட்டான் பிரதேச சபைக்கு 12,343 வாக்குகளும், முசலி பிரதேச சபைக்கு 10,819 வாக்குகளும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 13,636 வாக்களும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாலை 4:30 மணி அளவில் அனைத்து வாக்கு பெட்டிகளும் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 47 வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வட்டார ரீதியில் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து தேர்தல் வாக்களிப்பு விபரங்கள் அறிவிக்கப்படுவதாகவும் முழுமையான வாக்களிப்பு முடிவுகள் மாவட்ட செயலகம் ஊடாக அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.