இலங்கையில் அதிகளவு பக்தர்கள் கலந்துகொள்ளும் தீமிதிப்பு உற்சவத்திற்கு புகழ்பெற்ற கிழக்கு இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில், பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று (27) மாலை தீ மிதிப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மத்திய பிரதேசத்தில் பன்னெடுங்காலமாக அருளாட்சி செய்யும் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் அதிகளவு பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயமாக இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகின்றது.
இந்த ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவத்தில், பிற்பகல் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று, அம்பாளின் கடல்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, அம்பாள் ஆலயத்திற்கு வருகை தந்தவுடன், தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று, தெய்வாதிகள் சூழ, பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ, பக்தர்களின் பக்தி கோசங்களுடன் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதேவேளை, இந்த தீமிதிப்பு உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.