இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வரலாற்று கறுப்பு சம்பவத்தின் மூன்று மாதங்களுக்கு பின்னர், பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்த மௌனத்தை இந்திய வீரர் விராட் கோலி கலைத்தார்.
2025 ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பானஅர்த்தமுள்ள நடவடிக்கைக்கான ஆறு அம்ச அறிக்கையை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்ட சில நாட்களுக்குப் பின்னர் விராட் கோலியின் இந்த அறிக்கை வந்துள்ளது.
கடந்த 2025 ஜூன் 4, அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றி ஊர்வலத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர்.
மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது பெங்களூரு அணியின் முதல் ஐ.பி.எல். கிண்ண வெற்றியைக் கொண்டாட வேண்டிய மகிழ்ச்சியான தருணத்தை பெரும் சோகமாக மாற்றியது.
இந்த நிலையில், பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலி, “ஆர்சிபி அணி வரலாற்றில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வேண்டிய நாள், துக்கம் நிறைந்ததாக மாறியது. கொண்டாட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகி விட்டது. அன்பு, அக்கறை, மரியாதையுடன் ஒன்றாக முன்னோக்கி செல்வோம்” என்று உருக்கமாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, ஆர்சிபி நிர்வாகம் உரிய அனுமதி பெறாமல் விழாவை அறிவித்ததாக கர்நாடக அரசு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, விராட் கோலி இடம்பெற்ற வீடியோ ஒன்று, ரசிகர்களை இலவசமாக வெற்றி விழாவில் பங்கேற்க அழைத்ததாகவும், இது கூட்ட நெரிசலைத் தூண்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த துயரத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஆர்சிபி அணி ‘RCB Cares’ என்ற முயற்சியை அறிவித்து.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவிக்கு அப்பாற்பட்ட ஆதரவையும், ரசிகர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் நோக்கிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதியளித்துள்ளது.


















