மான்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று(13) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அந்தவகையில் மன்னார் மாவட்ட செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கலந்துகொண்டு, திணைக்கள அதிகாரிகளிடம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற அனர்த்தப் பாதிப்புத் தொடர்பாகவும், சீரமைப்புப் பணிகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.
குறிப்பாக வீதிச்சீரமைப்பு, குடிநீர்வசதி, மின்சாரவசதி, தொலைத் தொடர்பு வசதி, கடற்றொழில்பாதிப்பு, கல்வி மற்றும் சுகாதாரப் பாதிப்புக்கள், விவசாயப் பாதிப்பிற்கான இழப்பீடு, நெற்செய்கைப் பாதிப்பிற்கான இழப்பீடு, கால்நடைகளின் பாதிப்பு நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்தொடர்பில் இதன்போது ஜனாதிபதி உரிய அதிகளிடம் நிலமைகளை கேட்டறிந்துகொண்டதுடன், வெள்ளப்பாதிப்பு சீரமைப்புப்பணிகளை விரைவுபடுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், உபாலி சமரசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், ரிஷாட் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் வடமாகாண மாகாண மற்றும் மன்னார் மாவட்ட திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















