திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மோசமான காலநிலையின் தாக்கத்தால் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் பி.ப 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
டிசம்பர் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதுடன், இன்றைய தினம் ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் நேற்று (17) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.














