நாட்டின் பல நகர்புற இடங்களில் காற்றின் தரமானது மோசமடைந்து வருவதாக இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
அண்மைய இந்த அளவீட்டு நிலைமைகள் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்குச் செல்வதை வெளிக்காட்டுகின்றன.
கொழும்பு 07, வவுனியா, கண்டி, கேகாலை, காலி, எம்பிலிப்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரக் குறியீடு (AQI) 100 க்கு மேல் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த நிலைமை மேலும் நீடிக்கும் என்றும், நாடு முழுவதும் காற்றின் தரக் குறியீடு 44 முதல் 112 வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நகரங்கள் மிதமான மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், காலி மற்றும் புத்தளம் தொடர்ந்து சற்று ஆரோக்கியமற்ற சூழ்நிலையை அனுபவிக்கும்.
அதேநேரம், நுவரெலியா காற்றின் தரம் சிறந்த நிலையில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டின் உச்ச நேரங்கள் காலை 8.00–9.00 மணி முதல் மாலை 4.00–5.00 மணி வரை இருக்கும் என்று NBRO குறிப்பிட்டுள்ளது.
இந்த நேரங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே காற்றின் தரக் குறைவினால் பாதிப்படையக் கூடிய பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் பாதுகாப்பு முகக்கவசங்களை அனுயுமாறும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
















