வடக்கு கடற்பரப்பான சுண்டிக்குளம்,மாத்தளன் கடற்பரப்புகளில் தற்போது இந்தியன் இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
நாட்டில் உள்ள கடற்பரப்புகளில் நிலவிவரும் சீரற்ற காலநிலையாலும், கடல் கொந்தளிப்பாலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு சென்று மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளார்கள்
இதை சாதகமாக பயன்படுத்திய இந்திய இழுவை மடி மீனவர்கள் சுண்டிக்குளம்,மாத்தளன் கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீட்டர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து அச்சமின்றி இழுவை மடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்
வடக்கு கடலில் தற்போது இறால் சீசன் என்பதால் அதனை அறிந்து கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்ளின் வாழ்வாதாரத்தை அழித்துச் செல்கின்றார்கள்
சுண்டிக்குளம் மற்றும் சாலை பகுதியில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளங்கள் அமைந்திருக்கின்ற போதிலும் கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்திய இழுவைமடி படகுகள் எந்தவித பயமுமின்றி தொழில் செய்து வருகிறார்கள்.
வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.அவர்களின் நீண்டகால கோரிக்கைக்கு இதுவரை எந்த ஒரு அரசும் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லையென மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.











