அமெரிக்காவில் சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்பட 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்கா அதிரடியாக இரத்து செய்துள்ளது.
இதுபற்றி அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், 8 ஆயிரம் மாணவர் விசாக்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு அமெரிக்க பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட 2,500 தனிநபர் விசாக்கள் உள்ளிட்ட 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் இதன்பின்னர் அவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பின்னர், குடியேற்ற விதிகள் மற்றும் சட்டங்களை அரசு தீவிரப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், தேச பாதுகாப்பை வலுப்படுத்தவும் மற்றும் குடியேற்ற சட்டங்களை அமுல்படுத்தவும் நடந்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க சட்டங்களை மீறி நடந்து கொள்பவர்கள் குறிப்பிடும்படியாக மாணவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தது.
இதனால், அவர்களின் விசாக்கள் இரத்து செய்யப்படுவதுடன், நாடு கடத்தவும் செய்யப்படுவார்கள்.
வருங்காலத்தில் அமெரிக்க விசா பெற தகுதியற்றவர்களாகவும் ஆகி விடுவார்கள்.














