சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தீர்மானங்களை தனியாக தானாக எடுக்கின்றார். அது தவறான நடவடிக்கை என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் செய்தது தவறான நடவடிக்கை. ஆரம்பத்தில் இருந்து அவர் சிறுபான்மை கட்சிகள் சார்பான அங்கத்தவராக அரசியலமைப்பு சபையில் இருக்கின்றார். ஆகவே சிறிய கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் என்பவற்றின் நிலவரங்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு அவர் அந்த இடங்களில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஆனால் அவரைப் பொறுத்தவரையில் தனியாக தானாக சில தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்.
அது எதிர்தரப்பில் இருக்கக் கூடிய சிறிய கட்சிகளுக்கோ, சிறுபான்மை கட்சிகளுக்கோ விரோதமான முடிவுகளாக இருக்கிறது. அது நாடாளுமன்றத்தில் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகியது. அவரது கட்சியும் அதனை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. அவரை அந்த பொறுப்பில் இருந்து விலகுமாறு அவரது கட்சி ஆலோசனை கூறியுள்ளது.
அவரது நடவடிக்கை வெறுமனே கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது மாத்திரமல்ல. அதற்கு முன்னர் வந்த நியமனங்களில் கூட அவர் அவ்வாறு நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே அவர் ஏன் அவ்வாறு நடந்து கொள்கின்றார். ஏற்கனவே அந்த சபையில் ஆளும் தரப்பு, பிரதமர், சபாநாயகர், எதிர்கட்சி தலைவர் என 19 பேர் இருக்கிறனர். அதில் சிறுபான்மைகட்சிகள், சிறிய கட்சிகளின் உள்ளக் கிடக்கைகளை பிரதிபலிக்கக் கூடிய ஆளாகத் தான் இவர் இருக்க வேண்டும். அவர் அவ்வாறு கடந்த காலத்தில் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மேல் சுமத்தப்பட்டுள்ளது.
ஆகவே அவரது கட்சியும் அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றது. நான் நம்புறேன். அவரர் ஒரு தமிழ் தேசிய இனத்தைப பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற அடிப்படையிலும், தமிழ் தேசிய இனத்திற்கு குரல் கொடுக்கின்றவர் என்ற அடிப்படையிலும் அவர் தான் செய்த நடவடிக்கை சரியா என்பதை அவர் தான் சீர்தூக்கி பார்க்க வேண்டும். அதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவரது கட்சி வழங்கிய ஆலோசனையை கேட்பதும் கேட்காததும் அவரது விருப்பம் எனத் தெரிவித்தார்.












